கபாலியும் கடந்து போகும்...!

ஐந்து நாட்களாய் அகிலமெங்கும் கபாலி தான்...தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் கபாலிக்கே. விவாதத்திற்கு வேறொரு பொருளின்றி தனித்து நிற்கிறான் கபாலி...!

அதிகம் காசு வைத்து விற்றது, காரித்துப்பிய நீல சட்டையை இணையத்திலேயே கழுவி ஊற்றியது, பிற சாந்தும், இந்து கிருஷ்ணாவும் கபாலிக்கு மொட்டை அடித்தது, இடையில் அதிரடியாய் சிவாவின் முத்து சிதறல்கள் என்று எல்லா  விஷயங்களையும் தாண்டி, தமிழ் ரசிகனுக்கு குறிப்பாக ரஜினி ரசிகனுக்கு கபாலி தொடர்ந்து விருந்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறது...!

'தெறி'யும், 'வேதாள'மும் வெற்றிக்கொடி கட்டிய தமிழ் கூறும் நல்லுலகில் கபாலி தறிகெட்டு ஓடுவது மிகையே அல்ல...! கபாலி கல்லா கட்டவில்லை என்றால் தான் கவலை பட வேண்டும்.

லிங்காவில் கற்ற பாடம் கைப்பெற, கபாலியின்  கலெக்ஷனுக்கு கட்டயம் கூறுகின்றது  (காத தூரம் நோக்கினும் காணக்கிடைக்கவில்லை யாதொரு சிங்காரவேலனும்.) கலைபுலியின் கடைவாய் ஓரப்புன்னகை...!

கோச்சடையானும், லிங்காவும், ஏற்படுத்திய அஜீரணத்திற்கு, கபாலி எனும் மருந்து குடித்து விட்டார் ரஜினி, ஏப்பமாய் அறிக்கை வெளியிட்டவாறே.

ஆனால் ரஞ்சித் என்ற படைப்பாளிக்கு ?

நிச்சயம் இது தோல்வி. விடு பூக்களை அழகிய மாலையாய் தொடுக்காமல் வரிசை மட்டுமே படுத்தி...படுத்தி எடுத்து விட்டதன் விளைவு...! கருத்தியலின் கழுத்தறுக்கப்பட்டு விட்டது கபாலியில் என்பதே நிதர்சனம்.

ஒடுக்கப்பட்ட மலேசிய தமிழ் மக்களின் அடுக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு, ரஞ்சித்தின் தீர்வு.....அசடு வழிகிறது கபாலியின் துப்பாக்கியை போலவே...!

முன்னேற முடியாமல் தவிக்கும் தமிழ் சமூகத்தின் முகத்தில் உமிழ்ந்த எச்சிலின் மிச்சத்தை கடல் கடந்து காசாக்கி விட்டதுடன் முடித்து போகும் இவர்களின் சமூக அக்கறை...!

இனி என்ன? 

கபாலியின் கங்குல் இன்னும் கொஞ்ச நாள் மட்டுமே....!

சூடு தணிந்ததும் தணிந்து விடும் மலேசிய தமிழர்களின் வாழ்வுரிமை கவலைகள்...! உள்ளூர் பிரச்சனைகள் ஓராயிரம் இருக்க,  இனி உச்சு கொட்ட மட்டுமே உதவும் இவர்களின் வாழ்க்கை போராட்டம்...ஈழத்தமிழினம் போல...!

கை கொட்டி ரசிக்க நமக்கு கலைப்படைப்புகளா இல்லை..! அடுத்தடுத்து வரிசை கட்டும் காட்சிப்பொருட்களிடையே கூடிய சீக்கிரம் கபாலியும் காணாமல் போகும்...!

அடுத்து, தமிழ் கூறும் நல்லுலகம் இனி காத்துக் கிடக்கும் 2.0 காய்..!

ஆம்..கூடிய விரைவில், இன்னொரு முறை...இன்னொரு படைப்பு..இன்றிலிருந்தே தயாராய் இருங்கள் தோழர்களே..பிரம்மாண்டத்தின் உச்சம்...! யந்திரத்தின் இரண்டாம் பாகம்.

உங்களுக்குள் கருவாகி காத்திருக்கும் கனல், இன்னொரு முறை நெருப்பாகும்...அது வரை காத்திருப்போம்..கபாலி கடந்து போகும் பாதையிலேயே...!

*********************************************************************************

                                                                                                                                 ஸ்ரீராம் சம்பத்குமார்

கடவுளின் காதல் (மண்டை ஓடும் சில வைரங்களும்....!)

டேமியன் ஹிர்ஸ்ட் ( Damien Hirst)னு ஒரு ஆங்கிலக் கலைஞர்.  51 வயசான முக்காலே மூணு வீசம் ஒரு தாத்தா...!

கலைஞர்னா.....என்ன குறளோவியம், நெஞ்சுக்கு நீதி மாதிரி ஏதாவது எழுதுவாரா?....அதெல்லாம் இல்ல..!

ஒண்ணுக்கும் உதவாதுன்னு தூக்கிப்போட்ட பழங்கால பொருட்கள சேகரிச்சு, அதவெச்சு  புதுசா வித்யாசமா  எதையாவது உருவாக்கி ஏலம் விட்டு சம்பாதிக்கிறவர்.

உலகத்துல எல்லாரும் ஏதாவது ஒரு வேலை செஞ்சு தான் பொழைக்கிறாங்க..அதுல இந்த ஆளும் ஒண்ணு, இப்ப எதுக்கு இந்த ஆள பத்தி ஒரு பதிவுன்னு தானே யோசிக்கிறீங்க....கொஞ்சம் பொறுங்க விஷயம் இருக்கு.

இந்த ஆளு கிறுக்குத்தனமா எதையாவது செஞ்சு வைக்க, அதை இந்த புத்திசாலி உலகம் கொண்டாடுதான்னு யோசிக்கறதுக்கெல்லாம் முன்னாடி....!

2015ஆம் ஆண்டு கடைசீல, tax கட்டி இவரு கணக்கு காட்டின சொத்து மதிப்பு மட்டும் நம்ம காசுல சுமார் 20,000 கோடி.

என்ன மெய்யாலுமா ? அட..சாத்தியமாங்க...!

இவரு ஒண்ணும் அம்பானி,  டாடா, பிர்லா மாதிரி பெரிய தொழிலதிபர் எல்லாம் இல்லீங்களே...அப்புறம் எப்புடி இம்பூட்டு காசு ?

அதத்தான் விரிவா பார்க்கலாம்...இல்ல..இல்ல..படிக்கலாம்....வாங்க...!

ஆரம்பமெல்லாம் ரொம்ப சாதாரணம் தான். ஏதோ படிச்சாரு, ஏதோ செய்தாரு, ரெண்டு வாட்டி திருடி மாட்டிகிட்டு ஜெயிலுக்கு கூட போனாரு.

அப்படியே கூட்டத்தோட கோவிந்தா போடாம, வாழ்க்கை, வியாதி, வலி, மரணம் இதெல்லாம் என்னனு, கொஞ்சம் வித்யாசமா சிந்திக்க ஆரம்பிச்சது தான் திருப்புமுனை.

மேலே சொன்ன வா, வி, வ, ம, இதையெல்லாம் கலைப்பொருளாக்கி உணர்ச்சிபூர்வமா உணரவச்சா எப்படி இருக்கும் ? நல்லா தான் இருக்கும்..ஆனா..எதையும் ஆரம்பிக்க காசு வேணுமே...!

முட்டி மோதி பார்த்ததுல, சல்லிக்காசு தேறலை. எதிலேயும் சம்ப்ரதாயம் பார்க்கிற ஆங்கில சமூகம்  'வலி' டா, 'வியாதி' டா, 'சாவு' டா னு இவரு போட்ட  சத்தத்துக்கு இவரை நாடு கடத்தாதது தான் மிச்சம்.

எல்லார்க்கும் வாழ்க்கைல ஒரு முறையாவது ஒரு 'குஞ்சுமோன்' மாட்டுவார், இயக்குனர் ஷங்கருக்கு வாய்ச்சாமாதிரி, அத correctஆ பயன் படுத்திக்கணும்.

1991ல நம்ம ஆளுக்கும் Charlesனு ஒருத்தர் மாட்டினார். அவரு கிட்ட அடிச்ச காசை எடுத்துக்கிட்டு உடனே இவரு போய் பார்த்தது ஒரு ஆஸ்திரேலிய மீனவரை.

சில மாசங்களுக்கு பிறகு, Charles, Londonல நடத்துன 'young British Artists Show'ல இவரு வெச்ச ஒரு காட்சிப்பொருள் உடனே தீயா பத்திக்கிச்சு.

Showக்கு வந்த மொத்த கூட்டமும் இங்க தான் மொய்க்குது.

'யென்னாயா இது? ன்னு கேட்டதுக்கு சிரிச்சிகிட்டே Damien  சொன்னாரு:

'The Physical Impossibility of Death in the Mind of Someone Living'

அது ஒரு 14அடி நீள கண்ணாடி பெட்டி. பெட்டிக்குள்ள முழுசா வாயை திறந்துகிட்டு ஒரு நிஜ சுறா மெதக்குது. சத்தியமா அதுக்கு உயிர் இல்ல, பொம்மையுமில்ல. சிலிகானும் எஃகும் கலந்து அருமையா பாடம் பண்ணி வெச்ச ஒரு செத்த மீன். வாய் வழியா பார்த்தா, வால் முனை வரைக்கும் தெரியற மாதிரி அமைப்பு. கடுமையான உழைப்போட கொஞ்சம் கற்பனையும் கலந்து செஞ்ச கலவை.

இதுவரைக்கும், டைனோசரையே தத்ரூபமா சிலையா வடிச்சு வெச்சா கூட, இன்னும் நல்லா செஞ்சு இருக்கலாம்னு 'review comment' போட்டுட்டு போய்கிட்டே இருந்த சமூகம்,  உயிரில்லாத ஆனா உண்மையான உடம்ப பார்த்து மெர்சலானது.



இதுக்கப்புறம், கண்ணாடி பெட்டில இந்த ஆளு வெச்ச எல்லாமே அதிரி புதிரி ஹிட்டு. எல்லாமே உயிரோட வாழ்ந்த, வாழ போராடின...உயிர் இல்லாத உண்மையான ஜீவராசிகள்..ஆனா அதுல ஜீவன் இருந்துச்சு...அதோட வலி அந்த பெட்டிக்குள்ள மிச்சம் இருந்துச்சு...!

'Formaldehyde'ங்கற ஒரு திரவக்கலவை நிரம்பின அந்த கண்ணாடி பெட்டிக்குள்ள, முகத்துல இருக்குற சுருக்கம், சின்ன சின்ன முடி கூட மாறாம இவரு பாடம் பண்ற விதம் தான் 'Secret of his Success' னு சொல்லலாம்.


அஞ்சே வருஷத்துல, இவரோட படைப்புகள் எல்லாம் தெறி ஹிட்டாக, 1995ல டர்னர் விருது தேடி வந்துச்சு . இந்த விருது சினிமாக்கு ஆஸ்க்கார் எப்படியோ, பத்திரிக்கைகளுக்கு புலிட்ஸர் விருது எப்படியோ அப்புடி. '

தொழில்' தொடங்கி அஞ்சே வருஷத்துல டர்னர் விருது வாங்கிறதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனா நம்ம ஆளு அசால்ட்டா வாங்கினாரு .

இதுக்கு அப்புறம் இவரோட சாமான் இல்லாத மியூசியமோ, கண்காட்சியோ உலகத்துல எங்கயும் இல்லன்னு சொல்ற அளவுக்கு அவ்வளவு பிரபலமாயிட்டாரு.

சரி...பிரபலமெல்லாம் ஆகியாச்சு...ஆனா முக்கியமான விஷயம்..அதாங்க காசு..கொஞ்சம் நஞ்சம் இல்ல..20,000 கோடி..அதெப்புடி வந்துச்சு?

அங்க தான் இதுவரைக்கும் வெளியே வராத Damien  என்கிற வியாபாரி வெளிச்சத்துக்கு வராரு...!

'உன்னோட மியூசியதுல  என் பொருள வச்சிக்கோ..ஒரு பிரச்சனையும் இல்ல..உங்க மியூசியதோட 'Entry Fees' என்ன? 10 யூரோவா..சரி, என் பொருள வெச்சா 15யூரோ, மிச்சம் 5 யூரோ எனக்கு...!'

'எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க..அடுத்து நான் செய்யப்போறது, எந்த கண்காட்சிலயும் வெக்கறதுக்கு முன்னாடி உங்க வீட்ல இருக்கணுமா..இப்பவே ஏலம் எடுக்கலாம்.. of course, யாரு அதிகமா ஏலம் எடுக்கறாங்களோ அவங்களுக்கு இது சொந்தம்...!

பத்தாததுக்கு, அவரோட சொந்த கண்காட்சில இருந்த பொருள்கள் எல்லாத்தையும் 2008ல ஏலம் விட்டாரு...பாருங்க..அங்க தான் நின்னு ஜெயிச்சாரு நம்ம ஆளு...! செம்ம விற்பனை...! 'Natural History Museum' னு  பேர போட்டுக்கிட்டு உலகம் பூரா சம்பாதிச்சுக்கிட்டு இருந்த அத்தனை பேரும் இவரோட itemகள வாங்கி குவிச்சிட்டாங்க....!

அதென்ன..செத்துப்போன உயிரினங்களை பாடம் பண்ணி வெச்சா போதுமா..எல்லாரும் கிறங்கி மயங்கிப்போய் கோடிக்கணக்கா கொட்டிக்கொடுத்து வாங்கிடுவாங்களா அப்புடின்னு நீங்க நெனச்சா..ஐயோ..ஐயோ...!

நம்மளால யோசிக்கக் கூட முடியாத பல படைப்புகள் இவரால செய்ய முடிஞ்சுது..ஒண்ணே ஒண்ணு மட்டும் பார்ப்போம்...!

2007ல நம்ம ஆளு வெச்சு செஞ்ச 'அந்நியன்' தான் கடவுளின் காதல் (Love of God). அப்பாடி ஒரு வழியா பதிவோட தலைப்புக்கு வந்தாச்சு...!

பேரு, புகழ், பணம், எல்லாம் வந்தாச்சு..அடுத்தது என்ன? (for the love of god, what you are going to do next) என்று அம்மா கேட்க, அம்மா கேட்ட அந்த கடவுளின் காதல் என்கிற சமாச்சாரத்தை வச்சு மறுபடியும் மொதலேர்ந்து ஆரம்பிச்சாரு Damien.

தேடி தேடி அலைஞ்சப்ப, பழம்பொருள் விற்பனை நிலையத்துல ரொம்ப சல்லிசா அவருக்கு கிடைச்சது..ஒரு மண்டைஓடு...!

தடயவியல் ஆய்வுக்கு அப்புறம், அது 1720-1810 வருடத்திற்கிடைப்பட்ட, 35 வயதே நிரம்பிய ஒரு ஆண்மகனின் வாழ்க்கையின் எச்சம்னு தெரிஞ்சுது...!

300 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்து செத்துப்போன பேர் தெரியாத அந்த மனிதனுக்கு உயிர் கொடுக்க முடிவு செஞ்சாரு Damien ...சும்மா இல்ல, முழுக்க முழுக்க வைரத்தால...அத்தனையும் 18 காரட் வெள்ளி வைரம்..மொத்தமா 1106 வைரம்.அதுல ஒண்ணு நடு நாயகமா..ரொம்ப பெரிசா...!

பெல்ஜியம் வைரம், அந்த வைரத்தை பதிக்க, மண்டையோடு மேல பூச பிளாட்டினம்.(தங்கத்தை விட costly), இன்னும் சில கருவிகள்னு, ரொம்ப high budget..! ஆனா result  என்னவோ சூப்பர் ஹிட்.

ரெண்டே மாசத்துல, அந்த எதுக்கும் உதவாத மண்டைஓடு இப்படி ஆகிப்போச்சு...!



எல்லாம் முடிஞ்சு, காட்சிக்கு வந்தபோது, அந்த மண்டைஓட்டின் மதிப்பு, உலக சந்தையில் $100 மில்லியன் (675 கோடி ரூபாய்).

(2008இல், Amsterdam Rijksmuseumஇல், நேரில் பார்த்த போது, எனக்கு கண்ணிமைக்க நெடு நேரம் ஆனது)

அப்படி தொடங்கி பெருகியது தான் Damien Hirst என்கிற நம்ம ஆளோட வங்கி கணக்கு..இப்ப கிட்டத்தட்ட 25,000 கோடி கிட்ட வந்து நிக்குது....!

ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, னு  இவரோட படைப்புகள், சொல்லி சொல்லி கில்லி அடிக்குது...! அண்ணன் கணக்குல கரன்சி ஏறிகிட்டே இருக்கு...!

2016ல, 51 வயசுல ஐயா சந்தோஷமா ஓய்வெடுத்துகிட்டு இருக்காரு..அமெரிக்க காதலியோட..!

தன்னோட கலைப்படைப்புகள வெச்சு ஒரு கல்வி மன்றம் ஆரம்பிச்சு, நெறைய Damien Hirst ங்கள உருவாக்கி கிட்டு இருக்காரு...!

மேற்கொண்டு இணையத்துல தேடுனா, இவர பத்தி நெறய தெரிஞ்சுப்பீங்க..!

இவ்வளவு நீளமா இவரோட வெற்றி கதைய சொன்னதுக்கு ஒரே காரணம் தாங்க.....கொஞ்சம் மாத்தி யோசிச்சா..உலகம்..உங்கள வரவேற்கும்..காசு கொடுத்து..கௌரவிக்கும்....!

தனித்திறமைங்கறது, எல்லார்கிட்டயும் இருக்கு..அதை வெளிக்கொண்டு வர்றதுல தான் இருக்கு ஒரு மனுஷனோட வெற்றியும் தோல்வியும்....!
********************************************************************************

இது, ஏற்கனவே பதிவிட்ட ஏ.க.போ.ல மூணாவது தலைப்பா வந்திருக்க வேண்டியது..! கொஞ்சம் நீளமா போய்ட்டதால தனிப்பதிவா போட வேண்டியதாயிடுச்சு..!  தொடர்ந்து, உங்கள் நல்லாதரவை நல்கும்.....!


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

எல்லாம் கடந்து போகும்...!

என்னய்யா இந்த கபாலிக்கு வந்த சோதனை ...!

ரெண்டே நாள்ள தீர்ப்பு வந்திருச்சுருச்சு...! 16.5 லட்சம் வழக்குகள் நிலுவைல இருக்கு..ஆனா காபலிக்காக மட்டும் ஏன் சட்டத்துறை இவ்வளவு வேகமா செயல்பட்டுச்சுன்னு, நீதிமன்றத்தையே கேள்வி கேக்கறாங்க ஒரு க்ரூப்பு.

எனக்கென்னவோ கொஞ்சம் யோசிச்சு பாத்தா...சாட்சிகளை விசாரிச்சு, ஆதாரங்களை அலசி ஆராய்ஞ்சு தீர்ப்பு கொடுக்கவேண்டிய வழக்குகளோட, இந்த கபாலி வழக்கை சேத்துப் பார்க்கறது சரியா படலை...!

225 இணைய தளங்களை முடக்குங்கனு நீதிபதி சாட்டையை சுழற்றி இருக்காரு. நல்ல தீர்ப்பு ரெண்டு நாள்ள வந்தா என்ன ? ரெண்டு வருஷம் கழிச்சு வந்தா என்ன? 

ஆனா, இந்த தீர்ப்பால ஏதாவது உள்ளபடியே பயன் இருக்கான்னு பார்த்தா சந்தேகமா தான் இருக்கு. 120 ரூபாய்க்கு மேல தியேட்டர்ல ticket விலை இருக்கக்கூடாதுன்னு ஏற்கனவே ஒரு தீர்ப்பு இருக்கே.. அதுக்கே ஒரு பலனும் இல்ல..புதுசா வந்த தீர்ப்புக்கு மட்டும்....???

IP Addressஐ மாத்தறதெல்லாம் அதர  பழசு. இலவசமாவே VPNகள் கொட்டிக் கெடக்கிற இன்றைய இணையத்தளத்துல...முடக்கமாவது ஒண்ணாவது போங்க boss ...!

அதே நேரத்துல, கபாலிக்கு ஆப்பு வெச்சே தீருவோம்னு இன்னொரு குரூப்பு, FDFS - அதாங்க  First Day First Show இணையத்துல வெளியிட்டே தீருவோம்னு சவால் விட்ருக்காங்களாம் ...! 

என்னய்யா இந்த கபாலிக்கு வந்த சோதனை ...?

எ.க.போ Special: இங்க (Germany) மட்டும் 20 தியேட்டர்ல கபாலி release ஆகப்போகுது. 22ஆம் தேதி night show ticket விலை €20-25, கிட்டத்தட்ட 1500 ரூபாய். 

ஒரு showக்கு 100 ticketனு பார்த்தா கூட, வெள்ளிக்கிழமை single show collection மட்டும் 30 லட்ச ரூபாய். இதுல தெலுங்கு release தனி. 

கபாலி collection  இப்பவே கண்ண கட்டுதே...!

*********************************************************************************

வத்தி வெச்சிட்டியே பரட்டை....!

AMCA..அதாகப்பட்டது... American Mosquito Control Association, அமெரிக்காவோட கொசு ஒழிப்பு வாரியம், நெறைய ஆராச்சியெல்லாம் செஞ்சு, 5 வருஷத்துல அமெரிக்கர்களை கடிக்கிற கொசுவோட எண்ணிக்கையை 3% கொறச்சிட்டாங்க. மின்னணு கருவிகள் மூலமாவும், சுற்றுச்சூழலை சுகாதாரமா வச்சிக்கிட்டு மக்கள் கொடுத்த ஆதரவினாலும் தான் இதை சாதிக்க முடிஞ்சுதுன்னு சொல்லி இருக்காங்க .

அவங்க செஞ்ச மொத விஷயமே, இந்த கொசுவத்தி சுருள்களை தடை செஞ்சது தான். கண்ணுக்கு தெரிஞ்சோ தெரியாமையோ புகை விடும் எந்தப்பொருளும் கொசுவை நிரந்தரமா அழிக்க பயன்படாது. மாறாக, கொசுக்கள் அதோட சேர்ந்து வாழ பழகிடும், ஆனா அந்தப்புகையால மக்களுக்கு தான் வியாதி பரவும்கிறது அவங்க கணக்கு.
அமெரிக்க அரசாங்கமும் தடை பண்ணிடுச்சு. நம்ம ஊர்ல ஏன் இன்னும் தடை வரலைன்னு கேக்கறீங்களா? அட போங்க..!

சென்னைல மட்டும் கொசுவத்தி சுருள்களின் ஒரு நாள் விற்பனை தோராயமா மூன்று கோடி ரூபாய். தமிழ்நாடு முழுக்க, இந்தியா முழுக்க என்ன வருமானம் வரும்னு யோசிச்சுப்பாருங்க. தங்க முட்டை போடற வாத்தை யாராவது கொல்லுவாங்களா?

*********************************************************************************


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

ரஜினிகாந்த் எனும் மாய நதி...! (ஒரு உளவியல் பார்வை)

மஹாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து, திரைப்பிழைப்பு தேடி தமிழகம் வந்த 'சிவாஜி ராவ் கெய்க்வாட்'க்கு இப்பொழுது 65 வயது என்பதும், அவர் பேரன் பேத்திகள் கண்ட குடும்பஸ்தர் என்பதும், முடி கொட்டி நரை தட்டிப்போன ஒரு முதியவர் என்பதும், இன்ன பிற என்பதுமான நிதர்சனங்கள் எல்லாம் ஏனோ பெரும்பாலும் கண்டு கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு, தமிழ் சார்ந்த நல்லுலகத்தால் 'ரஜினிகாந்த்' என்கிற பிம்பம் மட்டும் முன் நிறுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.....!

ஊடகங்கள், 'மாபெரும் கலைஞன்' என்று போற்றிப்பேசினாலும், 'வெற்றுக் கூத்தாடி' என்று தூற்றிப்பேசினாலும், நிதர்சனத்தை மாற்றிப்பேசினாலும், எதற்கும் அசராமல் நீண்டகாலமாக நிலைத்திருக்கிறது அந்த பிம்பம்....மக்கள் மனதில்....!

அந்த பிம்பத்திற்கு உச்சத்தில் ஒரு இடம் கொடுத்து உட்காரவைத்திருக்கிறது தமிழகம்...! இது உளவியல் ரீதியான அங்கீகாரத்தின் விளைவால் கொடுக்கப்பட்ட இடம்..! மேதைகளுக்கும், சிந்தனையாளர்களுக்கும் கூட கொடுக்கப்படாத இடம்...! இன்னும் சொல்லபோனால் சினிமா, பொழுதுபோக்கு, நடிப்பு, இவற்றுக்கெல்லாம் கூட அப்பாற்பட்ட ஒரு இடம்...!
கூகுளில் 'Rajinikanth' என்று தேடினால், கிடைக்கும் 1.8 கோடிக்கு அதிகமான தேடல் முடிவுகள், வேறு எந்த இந்திய திரை பிரபலத்துக்கும்  இது வரை கிடைக்கவே இல்லை..! 
இடம் கொடுக்கப்பட்டு விட்டது...! கொடுத்தது ஏற்றுக்கொள்ளப்பட்டும் விட்டது...! இந்த கொடுத்தலுக்கும், ஏற்றலுக்கும் இடையிலான பந்தம் / பிணைப்பு என்பது ரஜினிகாந்த் என்ற நடிகன் விரும்பி வாங்கிய வரம்...அதுவே ரஜினிகாந்த் என்ற மனிதன் விரும்பாமல் பெற்ற சாபம்...!

உச்சத்தில் ஒரு இடம் என்பது, காரணமில்லாமல் கொடுக்கப்படவில்லை. காரணமும் மிக எளிதான ஒன்று தான்.

திரையில் அவன் அப்பாவி, நல்லவன், கருப்பு நிற காவலன்,. அருமையான காதலன், அநீதி கண்டு பொங்கி எழுபவன். வாரி வழங்கும் வள்ளல், அதர்மத்தை அழிப்பவன்..எப்பொழுதும் வெல்பவன்...! ஆகவே தமிழன் தனித்தனியாய் காணும் கனவுகளின் மொத்தத்தொகுப்பு அவன்..!

நிஜஉருவில், அவன் எளிமையானவன், பக்தியுள்ளவன், பகுத்தறிவு பேசாதவன், மிக மிக நல்லவனாய் காட்டிக்கொள்பவன்...!  ஆகவே மொத்தத்தமிழனின் முழு உருவமாய் நிற்பவன்...!

உள்ளேயும், புறத்தேயும் முற்றுமாய் ஒத்துப்போனதால் தமிழகம் தானே விரும்பி கொடுத்தது தான்..இந்த வரமும் சாபமும்...!

ஏழாவது வயதில் எனக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவால் இதுதான்.

நீ இந்த sideஆ அந்த sideஆ ? ரஜினியா கமலா ?

நண்பன் ஒருவன் சொன்னான்: 'கண்ண மூடு..யோசி..எந்த உருவம் உன் மனசுல தெரியுதோ நீ அந்த side.

கண்ணை மூடி நான் கண்ட உருவம் கருப்பாக இருந்தது...! என்னைப்போலவே...!
ரஜினிகாந்த் என்ற ப்ரதிமை (Icon) உருவான விதத்தை மூன்று பரிமாணங்களாக அணுகலாம். மூன்றுமே சமூக மானுடவியல் அடிப்படையில் முக்கியமானவை. முதல் பரிணாமம்: ரஜினி தன்னளவில் செய்த பங்களிப்பு. இரண்டாவது: மக்கள் ஆதரவு மற்றும் ரசிக மனோபாவங்களின் இயக்கம். மூன்றாவது: வணிக ஊடகங்களின் பிம்ப உருவகத்தேவை மற்றும் ஆற்றல். இவை மூன்றும் இணைந்ததாலேயே ரஜினிகாந்த் என்ற ப்ரதிமை சாத்தியமாயிற்று.
காலத்தை வென்றவன் - இந்தியா ட்டுடே   
எனக்கு ரஜினிகாந்த் என்ற பிம்பம் பெருந்திரையில் அறிமுகமானது 'தளபதி' படத்தின்போது. அந்த மாயத்தோற்றம் என்னுள் இறங்கி செய்த வித்தைகள் ஏராளம்...! எனக்கு மட்டுமே அந்த மாயம் நிகழ்ந்தது என்று நினைக்க நான் ஒன்றும் முட்டாளில்லை. ஏனெனில் அந்த மாயத்தோற்றம் தளபதிக்கு முன்னும் பின்னுமாக, கோடிக்கணக்கான மனங்களில் ஊடுருவி வித்தைகள் செய்து கொண்டுதான் இருக்கிறதெம்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

அந்த உளவியல் வித்தை ஒரு தொடர் சங்கிலி....! அது ஒரு விதமான போதை...! போதையேறியவன், புதிதாய் வருபவனுக்கு  கற்றுக்கொடுத்தே தீருவான்....! இது உலக நியதி...!

Cricket விளையாட்டின் இடையே கொஞ்சம் ஓய்வு எடுத்த போது தம்பி ஒருவன் என்னிடம் வந்தான்.

'என்னாண்ணே சும்மா சும்மா ரஜினி பேர பெனாத்திக்கினே  இருக்கிற...! அப்டி என்னா அந்தாளு பெரிய சூப்பர் ஸ்டார்' ?

தம்பி...நீ படையப்பா படத்த தியேட்டர்ல போய் பார்த்தியா ?

எங்கணே...காசு கேட்டாலே அப்பா உதைக்கிறாரு...!

சரி வா.................நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்..படம் பார்த்துட்டு சொல்லு...அவரு சூப்பர் ஸ்டாரா இல்லையான்னு...!

'டோய்..அண்ணன் நம்மள நாளைக்கு படையப்பா கூட்டிட்டு போறாறாம்லே...!

ஒண்ணே ஒண்ணு  என்று நான் நினைத்தது பல்கி பெருகினாலும், சளைக்காது அத்தனை பேரையும் கூட்டிபோனேன்.

படம் முடிந்து அவன் சொன்னான்...!

'ஒத்துக்கறேண்ணே, இந்தாளு அப்புடியே நம்மள முழுங்கறார்ணே ..கைல காசு மட்டும் இருந்தா உங்கள மாதிரியே நானும் பத்து பேரையாவது படம் பாக்க கூட்டியாருவேன்ணே..! தலைவன்ணே, தெய்வம்ணே...!

திருப்தியோடு அவனை வாழ்த்தி வழி அனுப்பிவைத்தேன்.   எனக்கொருவன் கிடைத்தது போல் அவனுக்கு நான். இப்படி எத்தனையோ...!

இந்த தொடர் சங்கிலியின் முற்றுப்பெறாத எழுச்சி தான் மேலே சொன்ன அந்த இடம்...ரஜினி என்ற பிம்பத்திற்கு கொடுக்கப்பட்ட இடம்...! A default parallel execution...!

Style என்கிற  வார்த்தைக்கு ஆங்கில அகராதியில் வேறு பொருள். தமிழ் அகராதியில் வேறு பொருள். ஆங்கில வாசனையே தெரியாத தமிழ் சமூகத்திற்கும் இந்த வார்த்தை தெரியும் அதன் அர்த்தமும் புரியும். 

இரண்டு முறை இந்தத்தொடர் சங்கிலி சற்றே விடுபட்டுப் போனதுண்டு..!

ஒன்று ' பாபா ' இன்னொன்று 'லிங்கா' (குசேலன் & கோச்சடையானை பொதுவார்ந்த தமிழ் சமூகம் ரஜினி படமாக ஏற்கவில்லை)

மக்களுக்குப் பிடித்தவற்றை செய்து காட்டியதால் தான் ரஜினி சூப்பர் ஸ்டார். இதை விடுத்து, தனக்கு என்ன பிடிக்குமோ அதை மக்களிடம் திணிக்க முயன்று தோற்றது தான் பாபா.

லிங்கா ?

லிங்கா அக்மார்க் ரஜினி படம் தான். சொல்லப்போனால் வெற்றிப்படமும் கூட..! (காசுக்காக சில சிங்காரவேலர்கள் கூவியதை நாம் பொருட்படுத்த தேவையில்லை)

ஆனால், என்னைப்பொறுத்த வரை, ரஜினியைப் பொறுத்தவரை அது தோல்விப்படம் தான்...! நேற்றைய, இன்றைய, ரசிகனுக்கு விருந்தாக இல்லாமல் போனாலும், ஓரளவு பசியாற்றிய 'லிங்கா', நாளைய ரசிகனுக்கு எட்டிக்காயாய் கசந்து துப்ப வைத்தது...!

'படையப்பா' பார்த்துவிட்டு என்னால் ரஜினி ரசிகனான ஒருவனின் தொடர்ச்சி ரசிகன், தன் இளைய கூட்டத்திற்கு 'லிங்காவை' காட்டி தோற்றுப்போனான்...! வாழ்த்தி வழி அனுப்ப வேண்டியவன், வசை வாங்கி ஒடுங்கிபோனான்...!

ஆனால், சங்கிலி விடுபட்டுபோனதே தவிர அறுபட்டுபோகவில்லை..! ரஜினி என்கிற அந்த பிம்பம் அறுபட்டுப்போகவும் விடாது...! விடுபட்டதை கூட உடனே ஒட்டிவிடும்...!

ரஜினி என்கிற குதிரை, விழுந்தவுடன் சோர்ந்து போகாது, சட்டென்று எழுந்து சந்திரமுகியாக பெருக்கெடுத்து ஓடிக்காட்டியது வரலாறு. கிழ குதிரையானாலும் இன்றும் அதனால் சட்டென்று எழுந்து ஓடமுடியும்..! ஓடவேண்டும்...!

M.G.R. என்ற பிம்பம் தமிழ் சமூகத்தின் மீது கொண்டிருந்த ஆளுமை என்பது ரஜினியால் கூட கைப்பெற முடியாத ஒன்று. அதேபோல் ரஜினி என்ற பிம்பம் தமிழ் சமூகத்தின் மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கிற தாக்கம் என்பது இனி வேறு எவராலும் கைப்பெற முடியாத ஒன்று...!

பள்ளி, கல்லூரிக்காலங்களின் கிளர்ச்சியில், விசிலடித்து, கைத்தட்டி கொண்டாடியதெல்லாம் இப்போது நகைப்பை கொடுத்தாலும், காலம் கொடுத்த முதிர்ச்சி, ரஜினி என்ற பெயரை கேட்டவுடனேயே என்னை அடிக்கடி ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாக்குகிறது...!

நிச்சயம் 'ரஜினிகாந்த்' ஒரு மாய நதி...!

எங்கு தொடங்கியது, எங்கு முடியும் என்றெல்லாம் தெரியாமல், பூப்பாதையிலும் போக முடியாமல், சிங்கபாதையில் மட்டுமே பயணிக்கும் மாய நதி...!

கண்மூடினால் மட்டுமே காணப்பெறும் இந்த நதியில் மூழ்கி நனைந்து போக காத்துக்கிடக்கிறது தமிழ் சமூகம். அந்த கற்பனை குளியலிலேயே  குற்றாலத்தின் குளிர்ச்சியையும் காண்கிறது....!

உடம்பெல்லாம் அலகு குத்திக்கொண்டு, ஒரு கூட்டம் அந்த நதியில் சாமி கும்பிடுவது தான் சகிக்க முடியவில்லையே தவிர, நதி தூய்மையாய் தான் இருக்கிறது....!

மூன்று தலைமுறைகளாய் ரஜினி என்ற இந்த மாய நதியில் அவ்வப்பொழுது நடைபெறும் மகாமகம் இன்னொரு முறை நிகழவிருக்கிறது, கபாலி என்ற பெயரில்.

வீழ்ந்து கிடக்கும் குதிரை எழுந்தாகவேண்டும். சென்ற முறை போல் இது அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல. இந்த முறை ஏற்படப்போகும் எழுச்சி என்பது ரஜினிக்கு மட்டுமல்ல, அவருடைய ரசிகர்களுக்கும் முக்கியமானது. ஏனெனில், எழுச்சியில் கொஞ்சம் சுணங்கினாலும் கொத்திகுதற சில வல்லூறுகள் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளன.

கே.வி.ஆனந்திடம் முதலில் பேசி, பிறகு கௌதம் மேனனிடம் கதை கேட்டு, முடிவில் யாருமே எதிர்பார்க்காத வகையில், தமிழ் திரையுலகின் பாலகனான ரஞ்சித்தின் கரம் பற்றியிருக்கிறது இந்த கபாலி குதிரை...எழுவதற்கு.

உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்தாலும், 40 வருட திரை அனுபவம் நம்பிக்கை அளிக்கவே செய்கிறது, இந்தக்குதிரை எழுந்து ஓடுமென்று.

மாய நதி தான்.....கற்பனை தான்....! ஆனாலும்..ஏனோ மனம் இன்னும் அந்த நதிக்கரையை விட்டு நீங்க மறுக்கிறது...! அதிசயமாய் இந்த நதியில் மட்டும் அலைகள்....! பாய்ந்து வரும் அலைகள், கால்களை நனைக்க, உச்சி வரை குதூகலிக்கிறது...! 'ஓ' வென உரக்க கத்த வேண்டும்போல் இருக்கிறது...!

எல்லா நதிகளின் விதியைப் போல, இந்த நதியும் கடலை நோக்கித்தான் பயணிக்கும். விரைவில் கடலில் கலந்து காணாமல் போகக்கூடும்...! அதுவரைக்குமாவது நனைந்து கொண்டிரு மனமே....!

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

எழுத்தால் மாயம் புரிந்த வித்தகர்கள்...2


இந்தியாவில் பிறந்து, இந்திய சூழலில் வளர்ந்து, திடுமென லண்டனுக்கு வந்துவிட்ட ஒரு சிறுவனின் மனநிலை எப்படி இருக்கும் ? எரிக் (Eric)க்கு முதலில் ஒன்றும் புரியவில்லை....!

ஒரு பிரிட்டிஷ் அரசாங்க ஊழியரின் மகனான தனக்கு இந்தியாவில் கிடைத்த மரியாதை இங்கு ஏன் கிடைக்கவில்லை ?  

அங்கு தான் பார்த்த ஏழை மக்களைப்போல் இங்கே பார்க்க முடியவில்லையே ஏன் ?

எல்லோரும் ஏன் யந்திரங்களை போல ஒரு கட்டுப்பட்ட  வாழ்க்கை வாழ்கிறார்கள் ? 

ஏன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன்னைப் பற்றியும் தங்களது பரம்பரை பற்றியும் இப்படி பீற்றிக்கொள்கிறார்கள் ?

ஏன்..ஏன்..ஏன்...ஐய்யோ.... கடவுளே...!

முற்றிலும் மாறுபட்ட இரு வேறு சூழலை அவன் மனம் ஏற்கவில்லை..உடலும் மனமும் சோர்ந்து போயிற்று....!

அவன் தன்னை தனிமை படுத்திக்கொண்டான்..!

தனக்குள்ளே கற்பனைகளை, கதைகளை, அதன் காட்சிகளை உருவாக்கி கொண்டான்..!

கதை மாந்தர்களோடு பேசத்  தொடங்கினான்..! 

பிறகு...எழுத தொடங்கினான்...!

1914இல், அவன் எழுதிய கவிதை உள்ளூர் செய்தித்தாளில் வெளி வந்த போது அவனுக்கு வயது 11. முதல் அங்கீகாரம்...!

1922இல் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரி சேர காசு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பொழுது அவன் கண்களில் பட்டது அந்த விளம்பரம்..! 

'வாருங்கள்..இளைஞர்களே..! இந்தியா இம்பீரியல் போலீஸ் படை உங்களை வரவேற்கிறது..! நல்ல உணவு, தங்க இடம்..குறைந்த நேர வேலை..நல்ல ஊதியம்..!'

விட்ட குறையோ, தோட்ட குறையோ..இந்தியா என்ற பெயர் அவனை சுண்டி இழுக்க..உடனே சேர்ந்து விட்டான்...! ஆனால் அவர்கள் அவனை தரை இறக்கி விட்ட இடம் பர்மா...! 

5 வருட போராட்ட வாழ்விற்குப் பிறகு 'இனி பொறுப்பதில்லை' என வேலையை உதறி விட்டு லண்டன் திரும்பிய போது, எழுதும் உத்வேகம் மட்டும் அவனுக்குள்..மன்னிக்கவும்..அவருக்குள் தீயாய் எரிந்து கொண்டிருந்தது...!

என்ன எழுதுவது..? 

அந்த சமயத்தில் வெளி வந்து கொண்டிருந்தவை எல்லாம் பெரும்பாலும் ஆங்கில அரசுமுறை பற்றியோ, ஆங்கில நாகரீகம் பற்றியோ, போர் மற்றும் வாழ்வு முறை பற்றியோ தான் சொல்லிக் கொண்டிருந்தன...! 

ஆகவே..எரிக் எழுதுபொருளாக எடுத்துக் கொண்டது.......ஏழ்மை மற்றும் வறுமை....அது கொடுக்கும் வலி ....!

1933இல் அவர் எழுதிய முதல் நாவல் புத்தக வடிவில் வெளி வந்தது...! 

மற்ற புத்தகளைப் போல் இதுவும் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களின் வாழ்க்கை முறையை தான் விளக்கி சொன்னது...! ஆனால்...அரசபரம்பரை சார்ந்தவர்களை பற்றியோ..கோமகன்களைப் பற்றியோ அல்ல...!

லண்டனிலும்..பாரிஸிலும்...கையில் காசு இல்லாமல் பிழைப்பு தேடும் பரதேசிகளின் நிரந்தரமில்லாத இருப்பைப் பற்றி (transient existence) பொட்டில் அடித்தாற்போல் சொன்னது அந்தப் புத்தகம் ...! 

குறிப்பாக, அரசர்களும் முதலாளிகளும், உழைப்பை மட்டும் உறிஞ்சி விட்டு, வெளி உலகத்திற்கு காட்டாமல் யாரை மறைத்து வைத்திருந்தார்களோ அந்த குடிமக்களைப் பற்றி...!

எரிக்கிற்கு தெரியும்..! கோமகன்களை காறி உமிழும் இந்தக் கதைக்கு தன் குடும்பத்திற்குள்ளேயே எதிர்ப்பு வரும் என்று...! ஆகவே புனைப்பெயரில் புத்தகத்தை வெளியிட்டார்...!

இது தான் 'எரிக் ஆர்த்தூர் பிளேர் (Eric Arthur Blair)', என்ற மனிதர் 'ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)' ஆன கதை. 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் புத்தகமாக கருதப்படும் அந்தப் புத்தகத்தின் பெயர் 'Down and Out in Paris and London, published in 1933'

                                                     9. George Orwell (A.D 1903 - 1950)

'ஆர்வெல்'லுக்கு, முதல் புத்தக வெளியீட்டிலேயே நல்ல தொடக்கமும் வாசக வட்டமும் உருவாகி இருந்தது.

கொஞ்சமும் தாமதிக்காமல் அடுத்த ஆண்டே அவரது இரண்டாம் புத்தகமும் வெளிவந்தது. 'Burmese Days (பர்மாவில் சில நாட்கள்) ' என்ற அந்த புத்தகம் பர்மாவிலும் இந்தியாவிலும் நடந்த பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கறுப்புப் பக்கங்களை கிழித்துக் காட்டியது.

உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு நம்மையே குற்றம் சொல்லும் 'ஆர்வெல்' என்னும் தலைவலியை எப்படி சமாளிப்பது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் மண்டை காய, புத்தகமோ மக்களிடையே பரப்பப்பப்பாக விற்பனை ஆனது.

அதற்கு பிறகு இவர் ஏன் ஸ்பெயின் (Spain) போனார் ?  எதற்கு உள்நாட்டு போரில் பங்கு கொண்டார் ? ஏன் ஸ்பெயின் அரசாங்கத்தால் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு லண்டனுக்கே  விரட்டி அடிக்கப்பட்டார்  என்பதெல்லாம் நமக்கு வேண்டாத விஷயம். ஆனால் போரில் அவர் கழுத்திலும் தோளிலும் கடுமையாய் தாக்கப்பட்டார்.  அதன் காரணமாக நீண்ட நெடிய புத்தகங்களை அவரால் எழுத முடியாமல் போயிற்று.

சிறுகதைகளும், கட்டுரைகளும், விவாத விளக்கங்களும் தான் அவரால் எழுத முடிந்தது.  BBC இல் பணியாற்றி விட்டு, ஒரு சோஷலிச செய்தித்தாளுக்கு ஆசிரியர் ஆன போது அவர் உடல்நிலை மிக மோசமாகி  இருந்தது.

தனது இறுதி நாட்கள் நெருங்குவது அவருக்கு தெரிந்தே இருந்தது. சாவின் வலியை விட தான் இன்னும் பெரிதாய் சாதிக்கவில்லை என்ற வலியே அவரிடம் மிஞ்சி இருந்தது.

1943இல் , தன்னுடைய 40ஆவது வயதில், தான் பார்த்துக்கொண்டு இருந்த அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு, எழுதுவதையே முழு நேர தொழிலாய்  கொண்டார்.

2 வருட உழைப்பில், அதுவும் வியாதிகளின் கடுமையான தாக்கத்தின் இடையில் ஆர்வெல் வெளியிட்ட அந்த புத்தகம் தான் உலகப்புகழ் பெற்ற 'Animal Farm' (விலங்குப் பண்ணை ) published in 1945.

சோவியத் யூனியனின் (இன்றைய ரஷ்யா ) சித்தாந்தத்தை கிண்டலடித்து வெளி வந்த அந்தப் புத்தகத்தின் முக்கிய பாத்திரங்கள் பண்ணையில் உள்ள இரண்டு பன்றிகள்.  ஒன்று ' ஜோஸப்  ஸ்டாலினையும்  (Josef Stalin)', இன்னொன்று 'லியோன் ட்ரொஸ்கியையும் (Leon Trotsky)' பிரதிபலிப்பதாக கருதப்பட்டது.

1945ஆம் வருடத்தில் தான் ஸ்டாலின், நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தார். 'ட்ரொஸ்கி' ஸ்டாலினை விட்டு பிரிந்து போய், அவரை கடுமையாய் தாக்கிக் கொண்டிருந்தார். கம்யூனிசமும் மார்க்சிஸமும்  மிக தீவிரமாக விவாதிக்கப்படட்டு கொண்டிருந்த நேரத்தில் தான்..அந்த இரண்டு பன்றிகளும் இவ்விரு தத்துவங்களையும் துவைத்துக் காயப்போட்டன அந்தப் புத்தகத்தில்.

மாற்றத்துக்கான சித்தாந்தங்கள் என்று விவாதிக்கப்பட விஷயங்களை விலங்குப் பண்ணையோடு ஒப்பிட்டு ஆர்வெல் செய்த நையாண்டி, அவருக்கு உலகபுகழையும், செல்வத்தையும் தேடிக் கொடுத்தது.

ஆர்வெல்லின் அடுத்த குண்டு என்ன ? எதைப்பற்றி ? என்று ஐரோப்பிய சமூகம் ஆவலாய் காத்துக்கிடக்க ஆரம்பித்தது.

' உங்களின் அடுத்த படைப்பு எதைப்பற்றி ?'

'இப்போது எதுவும் கூற முடியாது. கருப்பொருள் கிடைத்து விட்டது..அதை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்..!

எப்போது வெளியிட யோசித்திருக்கிறீர்கள் ?

நான் சாவதற்குள்...!

நாவலைப் பற்றி ஏதாவது ஒரு துப்பு கொடுங்களேன்?

'1984'.

பேட்டி  கண்டவருக்கு ஒன்றும் புரியவில்லை, அவருடைய கற்பனைக்கு எதுவோ எழுதிவிட்டு போக, என்னவென்று புரியாமல் குழம்பியது உலகம்.

1949ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் பெயர் '1984'.

'ஐரோப்பாவின் கடைசி மனிதன்' என்பது தான் முதலில் வைத்த பெயர். பின்பு '1984' என்று மாற்றி அமைக்கப்பட்டது.

1923-2005 வரை வெளிவந்த புத்தகங்களில், அதிகம் படிக்கப்பட்ட புத்தகங்களின் வரிசையில் 6ஆவது இடத்தைப் பிடித்த சிறப்புக்குரியது அந்தப் புத்தகம்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பல இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டிய அந்தப் புத்தகத்தில் தான் உலகப்புகழ் பெற்ற ' THE BIG BROTHER IS WATCHING YOU' என்ற வாசகம் இடம் பெற்றது.

சொல்லப்போனால், மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அந்த நாவல் வெளிவந்தது. தனிப்பட்ட சொந்த எண்ணங்களும் வாழ்க்கையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் போனால், விளையும் விபரீதங்கள் என்னவாக இருக்கும் என்று தெளிவாக கோடிட்டு காட்டினார்  ஆர்வெல்.

உண்மைகளை ஆணித்தரமாய் சொன்னதால், அரசாங்கங்களும் விளைவுகளை புரிந்து கொண்டு, மக்களை கண்காணிக்கும் நோக்கத்தை தளர்த்தின. இது  'ஆர்வெல்' என்கிற ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

நினைத்ததை சாதித்து விட்டதாக எண்ணினாரோ என்னவோ...அடுத்த வருடமே மரணம் அவரது எழுத்துப்பணிக்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டது.

இன்றும் உலக வாசிப்பாளர்களை பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கும் 'ஆர்வெல்' லின்  எழுத்துகளுக்கு மட்டும் என்றுமே முற்றுப்புள்ளி இல்லை...!

படித்தே ஆகவேண்டிய 'ஆர்வெல்' லின் உலகப்புகழ் படைப்புகள்:

1. 1984
2. Animal Farm
3. Shooting an Elephant
4. Down and Out in Paris and London

முதல் இரண்டு புத்தகங்களையும் கண்டிப்பாக தவற விடாதீர்கள், உங்களிடம் வாசிப்புத்தாகம் இருந்தால்...!

இணையத்தில் தேடினால் ஆர்வெல்' லின் அனைத்துப் படைப்புகளும் கிடைக்கும் இலவசமாக....!

********************************************************************************

மீண்டும் சந்திப்போம் மற்றுமொரு மாயம் புரிந்த வித்தகரோடு....!

அதுவரை...!

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்