எல்லாம் கடந்து போகும்....!

நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொது கொஞ்சம் கிலி ஏற்படுத்தினார்...!

"25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது...ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம நம்மள மாத்திக்கணும்...!

அவருடைய வார்த்தைகள் முழுவதும் எனக்கு உடன்படாவிட்டாலும், அதில் நிதர்சனம் இருக்கிறது என்றே பட்டது.

1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல. 

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்ங்கறது தான் அந்த நண்பரோட ( நான் ஒத்துக்கொண்ட) வாதம்....!

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்புளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.! 

உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?

'Ubar'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...! 

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  IPC Sectionஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...! 

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?

ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!

ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப துறைல 15 வருஷமா இருக்கறதால நான் 100% நம்புகிற ஒரு விஷயத்தை சொல்றேன் கேட்டுக்கோங்க...!

2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்.  எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ? 

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி.

அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..புதுசா தொழில்கள் வரும்..ஆனா வேலையில்லா திண்டாட்டம் கூடிகிட்டே போகும்.  மொத்தத்துல, சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும் அப்பு...! புரிஞ்சு நடத்துக்குங்க..சொல்லிட்டேன்...!


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்

பாரக் ஒபாமா சாதித்தது என்ன ?

எட்டாண்டுகளுக்கு முன்......!

ஐக்கிய அமெரிக்க அரசியல் களத்தில் கருப்பு நட்சத்திரம் ஒன்று ஒளி வீசத்தொடங்கிய வரலாற்று நிகழ்வை யாராலும் மறக்க முடியாது. கிட்டத்தட்ட, அது ஒட்டுமொத்த உலகின் புரட்சியாகவே பார்க்கப்பட்டது..பரப்பப்பட்டது.

அசாதாரணமான அரசியல் சூழலின் முடிவில், ஒரு கருப்பினத்தை பின்புலமாக கொண்ட தலைவர், வரலாற்றில் முதல் முறையாக வெள்ளை மாளிகைக்குள் அடி எடுத்து வைத்தார். 

கைமுட்டியை உயர்த்தி அவர் எழுப்பிய 'மாற்றத்தை விதைப்போம், அதைக்கொண்டு தேசத்தை வளர்ப்போம்' என்ற மந்திர வார்த்தை, கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கருப்பார்களோடு, குளிர்கால கோட்டு போட்ட படாடோப வெள்ளையர்களையும் சேர்த்து வசீகரித்தது. 

மாற்றத்திற்கான புதிய நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்த பேரின்பத்தோடும் புத்துணர்ச்சியோடும், ஐக்கிய அமெரிக்க குடியரசின் ஜனாதிபதி ஆனார் 'பாரக் ஹுஸைன் ஒபாமா'.

அரசியல் விடிவெள்ளி, கறுப்பின காவலன், உலக அமைதிக்கு வித்திடபோகும் உத்தமன்...! இன்னும் என்னவெல்லாமோ வாழ்த்தொலிகள்.

எழுந்த அத்தனை ஒலிகளையும் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு வெள்ளை மாளிகைக்குள்  பிரவேசித்தார் ஒபாமா.

எட்டாண்டுகளுக்கு பின்......!

நெருக்கடியான பதவிக்காலத்தின் கடைசீ நாட்களை நரைத்துப்போன வெள்ளை தலைமுடியுடன் கழித்துவருகிறார் அவர், எந்தப்பேரின்பமும் புத்துணர்ச்சியும் இல்லாமல். 

சக்தி வாய்ந்த பிரச்சாரத்திற்கும் உண்மையான நிதர்சனத்திற்கும் உள்ள இடைவெளியை அவர் புரிந்து கொண்டவராகவே காணப்படுகிறார், ஓட்டுப்போட காத்திருக்கும் அமெரிக்கர்களைப்போலவே.

பிளவு படுத்தப்பட்ட, ஒட்டாத பல செயல்திட்டங்களினால் அமெரிக்காவை பின் நோக்கி தள்ளி விட்டதாய் எழும் கடுமையான விமர்சனங்களை மவுனமாய் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில், காத்திருக்கிறார் ஒபாமா.

இனி, அமெரிக்க வரலாற்றில் ஒரு குறிப்பாய் கோடிடப்பட்டு காணாமல் போகப்போகும் திரு. ஒபாமா அவர்கள் இதுவரை சாதித்தது என்ன?

தாம் முன்வைத்த அரசியல் தத்துவத்தை பின்பற்றி தனது நிர்வாகத்தை சரியாக கட்டமைத்ததாக அவரால் மார்தட்டிக்கொள்ள முடியுமா?

மாற்றத்தை விதைத்து, அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக உலகம் ஒத்துக்கொள்ளுமா ?

ஒபாமா சொன்னது என்ன ? சாதித்தது என்ன ?

**********

2007ஆம் ஆண்டு, அமெரிக்க தேசிய கொடியின் வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருந்த உதய சூரியன் (ஆமாம் உதய சூரியன் தான்) சின்னத்தின் பின்புலத்தில், நரைக்காத கருப்பு தலைமுடியோடு, தான் விரும்பும் மாற்றமும், அதனால் நாடு பெறப்போகும் ஏற்றத்தையும்..ஒரு நீண்ட பட்டியலில் வெளியிட்டார் ஒபாமா. அதில் மிக முக்கியமானவை:

1. அனைத்து அமெரிக்க மக்களுக்கும் உலகளாவிய மருத்துவக்காப்பீடு.
2. அமெரிக்கர்களின் வாழ்வில் ஏழ்மைக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி.
3. மேம்படுத்திய பொருளாதார கொள்கைகள் மூலம் வருமான உற்பத்தி.
4.  உலக வெப்பமயமாதலை தடுக்கும் தீவிர பன்னாட்டு முயற்சி 
5.  வந்தேறிகளுக்கான புதிய சீர்மையான கொள்கை 
6.  போர் சூழல்களை தடுக்கும் அமைதிக்கான அந்நிய மேம்பாட்டுக்கொள்கை.

முதல் மூன்று அமெரிக்க நிலை சார்ந்தது. அடுத்த மூன்று உலக நிலை சார்ந்தது.

இந்த ஆறு அம்சங்களின் இலக்குகளை நோக்கி ஒபாமா கடந்து வந்திருக்கும் தூரம் தான் அவருடைய செயல்திறனை சீராய்வு செய்யும் காரணி என்பது உலக மதிப்பீட்டாளர்களின் ஒப்பீடு.

1. உலகளாவிய மருத்துவக்காப்பீடு:

2010இல் சட்டமாக்கப்பட்டு, 2014இல் செயல்முறைக்கு வந்த 'ஒபாமாகேர் (ObamaCare)' காப்பீடு திட்டம் கோடிக்கணக்கான அமெரிக்கர்களை காப்பீட்டு கட்டத்திற்குள் கொண்டு வந்து, ஒபாமாவை அமெரிக்கர்களின் நடுவே உயர்த்திக்காட்டியது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விமர்சனங்கள் எழுந்தாலும், இத்திட்டத்தின் பரவல், 2012இல் மறுபடியும் ஒபாமாவின் வெற்றிவாய்பை உறுதிப்படுத்தியது.

5 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே முறையான மருத்துவக்காப்பீடு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை தனது மிகப்பெரிய சாதனையாக குறிப்பிடும் ஒபாமா ஐரோப்பிய நாடுகள் இந்த காப்பீட்டு விஷயத்தில் என்றோ தன்னிறைவு பெற்று விட்டன என்பதை ஏனோ வெளிகாட்டிக்கொள்ளவில்லை..

2016 வந்த பின்பும், அந்த 'உலகளாவிய' என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது அமெரிக்கர்களுக்கு.

2. ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி:

அனைத்து அரசியல்வாதிகளும், பொதுவில் வைக்கும் வாக்குறுதியாகவே பார்க்கப்பட்டு அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்த 'ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி', இங்கு மட்டும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கப்பட்டது..சொன்னது ஒபாமாவாக இருந்ததால்.

மற்ற நாடுகளின் ஏழ்மை நிலைக்கும் அமெரிக்க ஏழ்மை நிலைக்கும் அதிக வித்யாசம் உண்டு. இங்கு ஏழ்மை என்ற வார்த்தைக்கு பூர்வ குடி கறுப்பின மக்கள் என்றே பொருள்படும். மொத்த ஜனத்தொகையில் 13% மேல் இருக்கும் இவர்களுக்கு அமெரிக்க ஆடம்பர வாழ்க்கை என்பது எட்டாக்கனி.

முதலாளித்துவ கோட்பாடுகளை எதிர்த்து, இவர்களுக்கு ஒபாமாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை அமெரிக்க ஊடகங்கள் ஒத்துக்கொள்கின்றன. நிற வெறியை உடைத்த ஒபாமாவின் எட்டாண்டு வெள்ளை மாளிகை வாசம் மட்டுமே தங்களுக்கு கிடைத்த அதிகப்படியான பலன் என்பதை வேதனையோடு அந்த சமூகம் பார்க்கிறது.

2016இல், ஹிலாரி கிளின்டனின் வாக்குறுதிகளில் மறுபடியும் காணக்கிடைக்கிறது...இந்த ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி.

3. புதிய பொருளாதார கொள்கைகள்:

மிக மோசமான அமெரிக்க பொருளாதார சூழலின் நடுவே தான் ஒபாமா பதவி ஏற்றார். 2008இல் பொதுத்துறை வங்கிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. வேலையில்லா திண்டாட்டம் எட்டு சதவிகிதத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. பம்பரமாய் சுழலபோவதாய் காட்டிக்கொண்ட ஒபாமா அரசு நிதானமாகவே செயல்பட்டது.

வருமானத்தில் ஏற்றமில்லாமல் ஐந்து சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்ட வேலையின்மை, அமெரிக்க மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. பழைய முதலாளித்துவத்தின் பிரதிபலிப்பாக வெளிவந்த புதிய பொருளாதார கொள்கைகள் அவர்களின் பொறுமையை சோதித்தன. முடிவு, ஒபாமா மீது வைத்திருந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கின.

2016இல், அமெரிக்க பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஒபாமா கருப்புத்தோல் போர்த்திய வெள்ளைப்புலியாகவே கருதவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

4. புவி வெப்பமயமாதல்:

அமரிக்கா ஜனாதிபதி என்பதை மீறி உலகம் ஒபாமாவை உற்று நோக்கியது இந்த விஷயத்தில் தான். Global Warming என்பது வெத்து விஞ்ஞானிகள் கூறும் புரட்டு கதை என்று உலக சாமானியர்கள் ஒதுக்கி வந்த வேளையில் தான் வீறு கொண்டு இதைப்  பற்றி பேசினார் ஒபாமா.

உலகத்தலைவர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தியபோது உலகமே இதனை தீவிரமாக எதிர்நோக்கியது, ஒபாமாவுடன் சேர்ந்து கவலைப்பட்டது. தடுப்பதற்குண்டான தீர்வுகளை ஆராய்ந்தது.

ஆனால், அமெரிக்க மோட்டார் வாகன கூட்டமைப்பின் எச்சரிக்கைக்கு பணிந்து, கார்பன் கழிவுகளை கட்டுப்படுத்தும் மசோதாவிற்கு ஒபாமா அரசு தடை விதித்த பொது, நரியின் சாயம் வெளுத்துப்போனது.

2016இல், ஒபாமா Global Warming பற்றி மூச்சு கூட விடுவதில்லை....!

5. வாழவைக்கும் வந்தேறிகளுக்கு ஜே:

இது ரொம்ப முக்கியமான விஷயம். அமெரிக்க கட்டமைப்பின் அடிப்படையையே ஆட்டுவிக்கக்கூடிய விஷயம். அமெரிக்காவை பொறுத்தவரை இது ஒருவிதமான முட்கள் நிறைந்த சோலைவனம்.

சோலைவனத்தின் பூக்கள் அமெரிக்க வளர்ச்சியில் இன்றியமையாத தேவை. ஆனால் முட்கள் களையெடுக்கப்பட வேண்டியவை.

ஒபாமாவின் மிதவாத தத்துவம் முட்களை மட்டும் கண்டுகொண்டு பூக்களாக மாற்ற முயன்றது. ஒரு கோடிக்கும் மேலாக மண்டிக்கிடந்த மெக்ஸிகோ மற்றும் ஸ்பானிய (español) முட்களை அமெரிக்க பூக்களாக மாற்றும் முயற்சியில் பூத்துகுலுங்கும் ஆசியப்பூக்களை  அவர் அதிகம் கண்டுகொள்ளாமால் போனது காலக்கொடுமை.

சம்பாதிக்க வந்தவர்களிடமிருந்தும் வரப்போகிறவர்களிடமிருந்தும் அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்தது ஒபாமாவின் அரசு. அமெரிக்க கல்வியும், தொழிலும், வாழ்வும் அதிக விலையில் விற்பனைக்காக உலகச்சந்தையில் வைக்கப்பட்டு மதிப்பிழக்கும் நிலை மட்டுமே மிஞ்சியது.

2016இல் தராதரமின்றி காசிருக்கும் யாரும் இங்கே படிக்க வரலாம். தகுதியின் தரம் குன்றிப் போனாலும், சொந்தக்காசில் ஐந்து வருடம் வரை வெட்டியாய் வேலை தேடலாம்.

6. அந்நிய மேம்பாட்டுக்கொள்கை

பதவியேற்கும் எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும் சொல்லி அடிக்கும் கில்லியான துறை இது. உலகளாவிய பார்வையில் தன்னை உயர்த்திக்  காட்டவும், உள்நாட்டு தோல்விகளை மறைக்கவும், மத்திய கிழக்கு நாடுகளை பர்கர் ரொட்டிக்குள் நுழைத்து, பார்பிகியூ ஸாஸ் ஊற்றி சாப்பிடுவது அவர்களுக்கு கை, கால் எல்லாம் வந்த கலை.

உருப்படியாக எதுவும் செய்வதற்கு முன்பே 'நோபல்' பரிசு தேடி வந்தது ஒபாமாவிடம். 'டாஸ்'ஸில் பெற்ற வெற்றியோடு ஆட்டத்தை இவர் முடித்துக்கொண்டதாகவே சொல்கிறது உலக ஊடகவியல்.

ஆனால், உண்மையில் 20 ஆண்டு அமெரிக்க வெளிநாட்டு அரசியல் பாணியில் இருந்து ஒபாமா சற்று விலகி நின்று தனது தனித்துவத்தை நிச்சயம் வெளிப்படுத்தினார் என்றே கருதவேண்டியிருக்கிறது...!

புஷ்ஷின் முட்டாள்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, இராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற்று, இவர் ஏற்படுத்திய நிம்மதி பெருமூச்சு..இன்னும் நிலைத்து நிற்கிறது. ஆயினும், அதுவே 'ஐஸிஸ்' அசுரனை வளர வழி செய்ததென்கிற விமர்சனத்தை தவிர்க்க முடியவில்லை.

வேறெந்த அதிபராக இருந்திருந்தாலும், ஆயுத சந்தையின் வளர்ச்சிக்காக 'சிரியா'வின் மீது நிச்சயம் அமெரிக்கா போர் தொடுத்திருக்கும், அணு ஆயுத வளர்ச்சியை தடுப்பதாக சொல்லிக்கொண்டு ஈரானுக்குள் நுழைந்திருக்கும். ஆனால் ஒபாமா அதை செய்யவில்லை.

ரஷ்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், என்று அமெரிக்க அதிபர்கள் எச்சில் துப்பும் எந்த தேசத்தோடும் ஒபாமா முறுக்கிக்கொள்ளாமல் காட்டிய மென்மையான போக்கு, பதுங்கி இருந்த சீனப்பாம்பு படமெடுத்து ஆடுவதற்கும் காரணமாகிப்போனது.

அமைதியை அழுத்திப்பிடித்து உயர்த்தி நிறுத்தியதில், ஒபாமா இந்த விஷயத்தில் நிச்சயம் ஒரு கதாநாயகன்.

2016இல், உள்நாட்டில் வெடிக்கும் துப்பாக்கி கலாச்சாரதையும், தீவிரவாத அச்சுறுத்தல்களையும், அடுத்து வரும் அதிபருக்கு விட்டு செல்ல காத்திருக்குறார் ஒபாமா.

*********************************

8 வருட ஆட்சியின் முடிவில், ஒபாமா தன்னை ஒரு நல்ல மிதவாதியாகவே வெளிப்படுத்தி யிருக்கிறார். 'உலகத்திற்கு பொதுவான அமெரிக்க தலைவன்' என்ற.....தான் உருவாக்கிய அந்த நேர்மறை பிம்பத்தை (Positive Image) விட்டு அவர் வெளியே வரவில்லை. 

ஒபாமா, ஒரு தனித்துவமான அம்பு. எந்த வில்லில் இருந்தும் புறப்படாத, மிகச்சிறந்த இலக்குகளை குறிவைத்து தானே தன்னை செலுத்திக்கொண்டு, வீறுகொண்டு சீறிப்பாய்ந்த அம்பு. ஆனால், பாய்ந்த அம்பு இலக்கு வட்டத்தை தைக்காமல், கொஞ்சம் முன்னாலேயே தொய்ந்து தரையில் வீழ்ந்து போனது வரலாற்றின் பரிதாபம்.

கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நடைபயின்ற அவரது கம்பீரம், கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது. இப்பொது தான் தெரிகிறது, பின்னால் கட்டிக்கொண்டிருந்த கைகளில் இருக்கும் அமெரிக்க முதலாளித்துவ காப்பு. அது விரும்பிய பொது மட்டுமே ஒபாமாவால் கை உயர்த்தி மக்கள் கூட்டத்தை பார்த்து ஆர்ப்பரிக்க முடிந்திருக்கிறது.

கம்பீரமாய், பிரமிப்பாய் காணக்கிடைத்த ஒபாமா இப்போது பாவமாய், அப்பாவியாய் கண்டுகொள்ளப்படுகிறார்...!

சில நாட்களுக்கு முன் இப்படி சொன்னார் ஒபாமா:

'என்னை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை...ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்..நான்...அப்பாவி இல்லை...!'

பாவம்..ஒபாமாவிற்கு தெரியவில்லை போலும்..அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று....!

*********************************

நிச்சயமாக, இந்தக்கட்டுரை எனது சொந்த பார்வை அல்ல. எழுத்துக்கள் மட்டுமே என்னுடையது. எண்ணங்கள் எல்லாம் என்னுடைய 5 வருட அமெரிக்க வாழ்வில் கிடைத்த நண்பர்களுடையது. வெள்ளையும், கருப்பும், இந்தியமும் கலந்த நட்புக்கூட்டம் அது. ஆனால், சிந்தனையிலும், செயலிலும் அனைவரும் மனிதர்களே என்று எனக்கு அடிக்கடி உணர்த்தும் கூட்டம். என் அடி நெஞ்சில் இருந்து புறப்படும் நன்றிகள் அவர்களுக்கு.

நிதர்சனங்களை சொல்லுங்கள்..உங்கள் சுய விருப்பு வெறுப்பு வேண்டாம், என்ற என் கோரிக்கையை ஏற்று..அவர்கள் கொடுத்த எண்ணத்தொகுப்பின் எழுதுவடிவமே இந்த பதிவு...!

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்



இனியாவது ஒரு விதி செய்வோம்...!



செவ்வானம் மேலேயும் 
பச்சை நிறம் கீழேயும் 
சுழலும் சூரியச்சக்கரம் நடுவிலும் 
எங்கும் தெறிக்கும் தேசத்தின் 
நிறத்தை கண்ணுயர்த்தி 
சுதந்திரத்தை சுவாசிப்போம்....!

வெளிர் நிறத்தில் கீழ்வானம் 
வெளுக்கும் போது 
விடியலுக்கு விழிவைத்து 
காத்திருப்போம்...!

மொழிப்பற்றோடு இந்தியன் என்ற 
முகப்பற்றையும் ஏற்போம்...!
எழுபது ஆண்டுகளுக்கு பிறகாவது 
எழுகின்ற தேசத்தை வார்போம்...!

ரத்தம் தோய்ந்த சரித்திரத்திற்கு 
புள்ளி வைப்போம்...!
சத்தம் இல்லாமல் வேற்றுமைக்கு 
கொள்ளி வைப்போம்...!

திசையின்றி திரிந்தாலும் 
விசையின்றி பறந்தாலும் 
தேனீக்கள் துயில் கொள்வது 
தேன்கூட்டில் தான்...!
நல் இதயம் தோள் சாய்வது 
தாய்நாட்டில் தான்...!

ஏசியும் பேசியும் பிரித்தாலும் 
தேசியம் மட்டும் நினைவிருக்கும்...!
புனிதம் சொல்லி எரித்தாலும் இறுதியில் 
மனிதம் மட்டும் நிலைத்திருக்கும்...!


மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்