2017 - ஆக்கமும் தாக்கமும்...!


வலை நட்புக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....!

நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பது நேரமும் நமது எண்ணங்களும் தான்...! தடுக்கவே முடியாத, தவிர்க்கவே முடியாத...முதுமை நோக்கிய பயணத்தின் ஊடே நாமும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம்....!

பிறந்து, உண்டு, கழித்து, வளர்ந்து, வளர்த்து, வீழ்ந்து போகும் இந்த வாழ்க்கை நாம் அறிந்ததே. நாம் விரும்பி நாட்கள் கழிவதில்லை. ஆண்டுகளும் தான். நேற்று - வரலாறு, இன்று - நிதர்சனம், நாளை- சவால், என இப்படியே போகும் இந்த பிறப்பில், நமது புரிதல்களுக்கும் கொஞ்சம் இடம் அளிப்போம்....!

வரப்போகும் ஆண்டின் சவால்களை எதிர்நோக்கும் இந்த வேளையில், கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்ப்போம், இளைப்பாறும் எண்ணத்தில்.

திரும்பிப் பார்த்து, தெரிந்து கொள்வது, தெளிந்து கொள்வது தேவை, எதிர்காலத்தை கட்டமைத்துக்கொள்ள.

2017 - ஆக்கமும் தாக்கமும் - அலசுவது தான் என் நோக்கமும் கூட. இந்த அலசலை உலகம் தழுவாமல், தேசம் தழுவாமல், நம் நாடு எனும் வட்டத்திற்குள் மட்டுமே நடத்த விரும்புகின்றேன்...! 

ஆண்டின் தொடக்கமே சோகமாய் தான் ஆரம்பித்தது நம் நாட்டிற்கு. ஜெயலலிதா என்கிற ஆளுமையை தொலைத்து விட்டு, கூட்டத்தில் தொலைந்த குழந்தை யாரை தேடுகிறோம் என்றே தெரியாமல் அழுதுகொண்டே தேடுவது போல, சோக பொங்கல் வைத்தது தமிழினம்.

அன்று தொடங்கி இன்று வைகுண்ட வாசலில் நிற்கும் வரை, பரபரத்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏகப்பட்டவை. வாருங்கள் அலசுவோம்...!

*******************************************************************************

2017 - தமிழகத்தின் தலையெழுத்தை திருப்பிப் போட்ட சம்பவம்:

1. ஜல்லிக்கட்டிற்கு தடை. பொங்கி எழுந்தது தமிழினம்.  நூற்றான்டு பழமை வாய்ந்த மெரினா, இப்படி ஒரு புரட்சிப் படையை பார்த்ததில்லை. ஜாதியும், மதமும் சரிந்து போய், இன உணர்வு பெருகி கட்டுப்படுத்த முடியாத எழுச்சியால், அதிகார வர்கத்தையே அடிபணிய வைத்த அற்புதமான சம்பவம் இது. அடித்து துரத்தப்பட்டாலும், எரித்து விலக்கப்பட்டாலும் - வெற்றி வாகை சூடியது தமிழினம்.

2. இவர் நமது முதல்வர்..! இதை இட்லி என்று சொன்னால் சட்னியே கூட நம்பாது தான். 'ஆண்டான் அடிமைக்கு' ஆகபொருந்தி, அடக்கம் பதவியுள் உய்க்கும் விதமாக இருந்த சாது, இனி பதவி இல்லை என்றானபோது, மிரண்டு போய் அம்மா சமாதியில் த்யானம் செய்தது. தியானத்தின் பலனாய் தர்மயுத்தம் தொடங்கப்பட்டது.

3.  'அக்காவுக்கு' சேவகம் மட்டுமே செய்ததாக சின்னம்மா சாதித்த போதும், முதல்வியாகும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ஊழலுக்கான ஊதியத்தை கூட்டுகளவாணிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்தது உச்ச நீதிமன்றம். அடுத்த அடிமையாய் எடப்பாடிக்கு முடிசூட்டிவிட்டு, செத்தும் கெடுத்த அக்காவின் சமாதியில் சத்தியம் செய்துவிட்டு சிறைக்குப் போனார் சின்னம்மா.

4. சின்னம்மா கை காட்டிவிட்டு போன அண்ணனின் அதிரடியில், அரண்டுபோய் இடைத்தேர்தலையே ரத்து செய்தது தேர்தல் ஆணையம். கட்சியும் சின்னமும் முடங்கிப்போக, R.K நகரவாசிகள் கொஞ்ச நாள் பணக்காரர்கள் ஆனது மட்டும் தான் மிச்சம்.

5. 'வருவேன் வருவேன்' என்று உசுப்பேத்தியே உடலை ரணகளமாக்கிய சூப்பர் ஸ்டாருக்கு முன்னால், 'வந்தே தீருவேன்' என்று வலது காலை ட்விட்டரில் எடுத்து வைத்தார் உலக நாயகன். ஆனால் பாவம், இதுவரைக்கும் ட்விட்டருக்குளேயே முடங்கி போய் கிடக்கிறது, இவரது அரசியல் வியூகம்.

6. தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தமிழினத்தின் தலையையும் நன்றாக தடவி நக்கியது GST.

7. இதற்குத்தானா இத்தனை அலப்பறை என்று அப்பாவி தமிழன் மூக்கின் மேல் விரல் வைக்கும் விதமாக, துணை முதல்வர் பதவி ஏற்புடன் இனிதே முடிந்து போனது தர்ம யுத்தம். TTVயை ஆதரித்த 18 சட்ட மன்ற உறுப்பினர்களை குற்ற உணர்வோடு நீக்கியது தான் ஒரே சாதனை.

8. சுத்தமும் சுகாதாரமும் தமிழ் சமூகத்தின் இரு கண்கள். தெரியாதா பின்னே ? அரசும், நகராட்சியும் 'டெங்கு'வை ஒழித்த விதமே போதும். கல்வெட்டில் பொறித்து வைத்து, எதிர்கால சந்ததிகள் அறிந்து கொள்ள வெட்டி ஒட்டி வைக்கலாம்.

9. உலக மகா RAID என்பதை தமிழினம் இதுவரை கேள்விப்பட்டு மட்டுமே இருந்தது. மத்திய அரசின் புண்ணியத்தில் இந்த முறை அனுபவித்து பார்த்தது. RAID நடந்தது, நடத்தப்பட்டது எல்லாம் சரி, ஆனால் பலன் மட்டும் பூஜ்யம். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக உச்சு கொட்டியபடி பேப்பரை மடித்து வைத்து விட்டு, பஜ்ஜி சாப்பிட புறப்பட்டு விட்டான் தமிழன். 

10. ஒட்டுமொத்த தமிழகத்தை பரபரப்பாகிய R.K நகர் இடைத்தேர்தல். விஷாலை junior comedian ஆக்கி, திமுகவை main  comedian ஆக்கி, அதிமுகவை வில்லனாகி, TTV தினகரனை கதாநாயகனாகிய இந்த தேர்தலின் முடிவு நமக்கு வரமா சாபமா ? 2Gஇல் திமுக தப்பித்தது கூட மழுங்கடிக்கப்பட்ட மகத்தான சம்பவம் இது.

மேற்குறிப்பிட்ட 10 சம்பவங்களில், தமிழினம் மறக்க கூடாத, மறக்க முடியாத, என்றென்றும் பதித்து வைக்கப்போகும் இரு சம்பவம் இது தான்:


இந்த இரு சம்பவங்கள் தான் வரப்போகும் ஆண்டு மட்டுமல்ல, அதையும் தாண்டி நமது நாட்டிற்குள் தாக்கம் ஏற்படுத்தப்போகும் வரலாற்று பதிவு.

*********************************************************

2017 - திரைகடல் தேடி தெம்பு கொள் 

கலையின்றி தமிழினம் எது ? கலைத்தாய் கொடுத்த பிள்ளைகளை தான் நாம் இதுவரை ஆளக்கொடுத்திருக்கிறோம். இனியும் கொடுப்போமா தெரியாது. எனவே அடுத்த அலசப்போவது, 2017இல் வெளிவந்த திரைப்படங்கள்.

 5. விக்ரம் வேதா: திருடன் போலீஸ் கதை தான். ஆனால், சொன்ன விதத்திலும், துரோகதிற்கு புதிய வடிவம் கொடுத்ததிலும், நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது இந்த படம்.  

4. தீரன், அதிகாரம் ஒன்று:  இது படம் அல்ல, பாடம். திராவிட கட்சிகளின் கேவலமான அரசியலையும், கட்டுப்படுத்தப்பட்ட காவல்துரையின் செயல்பாடுகளையும் கண் முன்னே நிறுத்திய படிப்பினை இந்த திரைப்படம்.

3. அறம்: இன்னொரு பாடம். அதே திராவிட கட்சிகளின் கேவலமான அரசியல். ஏழை எளிய மக்களை வாழ்விக்க ஓட்டு கேட்கும் அரசியலுக்கு, அவர்களை ஏழை எளிய நிலையிலேயே தான் வைத்திருக்க வேண்டும், அதற்கு அரசு எந்திரம் துணை போகும் என சொல்லிய விதம், பொட்டில் அடித்த பதிவு. 

2. அருவி: இது இந்த தலைமுறை மட்டுமின்றி, அடுத்த தலைமுறையும் கொண்டாடவேண்டிய படிப்பினை. திரை ஊடகத்தின் தேவையை தெளிவாய் பயன்படுத்திய விஷயத்தில், கடலாய் ஆர்பரிக்கிறாள் இந்த அருவி.

1. பாஹுபலி 2: பாடம் எல்லாம் இல்லை. வெறும் பொழுது போக்கு மட்டுமே. ஆனால், பார்த்து முடிக்கும் வரை தமிழகத்தை மட்டுமின்றி இந்திய தேசத்தையே தூங்க விடாமல் செய்த பெருமை இந்த படத்திற்கு உண்டு. உயிர் அக்கட தேசத்திலிருந்து வந்தது என்றாலும், கொண்டாடி தீர்த்தது தமிழகம்.

*********************************************************

2017 தமிழகத்தை அச்சுறுத்திய பிரச்சனைகள் 

5. கந்து வட்டியால் கொளுத்திக்கொண்ட குடும்பம்: வாயின் வழியே சுடுகம்பி நுழைத்து இதயத்தை குதறிய கொடுமை இது. பெற்றோர் கொண்ட துயரத்தில், ஏதுமறியா இரு பிஞ்சுகள் கருகிப்போனது. நெஞ்சு வெடித்துப்போனது, இந்த நிலை கெட்ட சமூகத்தை நினைத்து. கருகிய குடும்பத்திற்கு கருமாதி செய்ததோடு முடிந்து போனது எல்லாம். 

4. அடகு போன தமிழகம்: கெயில், Hydro-carbon, GST என அம்மா அண்டவே விடாத அனைத்திற்கும் 'ஆமாம் சாமி' போட்ட அடிமைகள் கூடாரம், அனிதாவை தூக்கிலிட்டு 'NEET' தாகத்தை தணித்துக்கொண்டது.  தேசிய நலன் சொல்லி, மாநில தேவைகளுக்கும், நாட்டு மீனவர்களுக்கும் பசுபிக் பெருங்கடலில் பிண்டம் வைத்த பெருமை இன்னும் தொடர்வது கொடுமை.

3. கொள்ளை போகும் நாட்டு வளம்: மணல், நீர், சாராயம், பால், கனிம வளங்கள் - இவை தான் ஆள்பவர்களுக்கு கரன்சியை கறக்கும் காமதேனு பசுக்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும், நில வளம் சுரண்டல் என்பது நிதர்சனம். இந்த ஆண்டும் மொட்டை கூட்டணியால் செய்வனே செய்யப்பட்டன. 

2. காசு கொடு, இல்ல ஓடு: தட்டியோ, அதட்டியோ கேட்டும் நிலையில் அரசும் இல்லை, மக்களும் இல்லை. அதனால், பிணம் தின்னி கழுகுகளுக்கோ ஆண்டு முழுவதும் தீபாவளி. லஞ்சத்தை அரசாணையில் கொண்டு வராதது மட்டுமே குறை. மற்றபடி குறையொன்றும் இல்லை. 

1. தலைவன் இல்லாத தமிழினம்: இதுவோ அதுவோ..எதுவாயினும் ஒரு ஆளுமை இருந்தது இதுவரை. இப்பொழுதோ தலை இல்லாத வால்களின் ஆட்டம் சகிக்கவில்லை. குழம்பிக்கிடக்கும் இந்த சமூகத்தை குட்டை என நினைத்து மீன் பிடிக்க தூண்டிலோடு நிறைய பேர் காத்துக்கிடக்கிறார்கள். வேதனையோடு வேடிக்கை பார்க்கிறது தமிழ் சமூகம்.

 *************************************************************

2017 - தமிழகம் இழந்தது என்ன 

5. மாண்புமிகு, இதய தெய்வம், புரட்சி தலைவி, டாக்டர் அம்மா அவர்கள், 2016ஆம் ஆண்டு நடத்திய GIM (Global Investors Meet)இல், பன்னாட்டு தொழில் முனைவர்களோடு பேசியதன் பலனாக, தமிழக வருவாயாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஒரு லட்சம் கோடி ருபாய்.  2017ஆம் ஆண்டில் குறிப்பாக HCL நிறுவனம் 2000 கோடி ரூபாயும், YAMAHA நிறுவனம் 1000 கோடி ரூபாயும், M&M நிறுவனம் 700 கோடி ரூபாயும் உடனடியாக முதலீடு செய்யும் என எதிர்பார்க்கபட்டது. இன்றும் எதிர்பார்க்க பட்டுக்கொண்டிருக்கிறது...!

4. மணல் தேவைக்கு மாற்றாக M-Sand மற்றும் ஏற்றுமதி மணல்: தமிழகத்தின் மணல் தேவை என்பது சிறு வீடு கனவோடு இருக்கும் மக்களிடம் இல்லை. உடனடி கொள்ளைக்கு வித்திடும் அரசியல் வியாபாரிகளிடம் உள்ளது. விலை குறைத்து விற்க தயாராக இல்லாத கூட்டம், உள்நாட்டு வளத்தை சுரண்டும் விஷயத்தில் தெளிவாக இருக்க,  ஆளும் அரசின் கவனம் கமிஷனில் மட்டுமே இருந்ததால் M-Sand மற்றும் ஏற்றுமதி மணல்....எல்லாம் தடை...! கோவிந்ததா  கோவிந்தா...!

3.  சாராய சாம்ராஜ்யம்: ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், மாரி  பொழியுமோ இல்லையோ, சாராயம் பொழியும். காசு கொழிக்கும். எல்லா ஆண்டும் இது தான் நிலைமை. இந்த ஆண்டும்  எல்லா சரக்கும்  கொள்முதல் செய்யப்பட்டது திராவிட கட்சிகளின் பினாமி ஆலைகளில் இருந்து தான். இந்த சரக்குகளின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய ஐரோப்பிய நிறுவனம் ஒன்று, இதைவிட பலமடங்கு தரமான, விலையும் மலிவான சரக்கு சப்பளை செய்ய டெண்டர் கேட்க, பொங்கி எழுந்த திராவிட உணர்வு, அவர்களை ஐரோப்பிய எல்லை வரை விரட்டி அடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்த்தது.

2. மத்திய அரசின் கல்விக்கொள்கை மாற்றங்கள், மாநில நலன் பாதிக்கும்படியாக இருப்பின், பெரும் எதிர்ப்பை பதிவு செய்வது தென்னிந்தியாவில் தமிழகம் மட்டுமே. காட்டுக்கத்தல் கத்தியும் ஆளுமை இல்லாத ஆட்சியின் கீழ், அரசு கல்லூரிகளில் மருத்துவம் மற்றும்  IITயில் பொறியியல் படிக்கும் வாய்ப்பு தமிழனுக்கு குறைந்து போனது.

1. 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தேசிய ஆட்சியில் தமிழகத்தின் பங்கு மிக குறைவு. இதனால், வரவேண்டிய, வரவிடாமல் தடுக்கப்பட்ட நலத்திட்டங்கள் ஏராளம். குறிப்பாக விவசாயம் நலிந்து, தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்த புறக்கணிப்பையே அறுவடை செய்தார்கள்.

******************************************************

மாற்றம் ஒன்று தான் மாறாதது. வரும் புத்தாண்டிலாவது தமிழகத்தின் தலையெழுத்து மாறுமா ?

காசுக்கு விலை போகாத கண்ணிய சமூகம் உருவாகுமா ?

தன்னலம் கருதாத, பொதுநலன் சார்ந்த சிந்தனையோடு ஒரு தன்னிகரில்லாத தலைவன் கிடைப்பானா ?

நல்லதே நடக்குமென்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை...!



மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார்