ஆயா சுட்ட வடையை முதலில் அமுக்கியது யார்? Part 2

3. பழம் போனாலும் வடை போகக்கூடாது...!

காதில் ரத்தம் வர அமெரிக்கா பார்த்துக் கொண்டிருந்த போதே, ரஷ்யா அடுத்த சிக்சருக்கு தயாரானது...! "இன்னும் என்னையா நாய் பூனைன்னு வேளாண்டிகிட்டு....அனுப்புயா நம்ம ஆளு ஒருத்தங்கள...! 

"என்னாது விண்வெளிக்கு மனுஷன அனுப்பனுமா...?" என்று ரஷ்ய வல்லுநர்கள் அடி வயிறு கலங்க பதறிப் போனார்கள். "லைக்காவிற்கு என்ன ஆச்சு பார்த்தீங்க இல்ல...!" என்று எல்லோரும் லீவு லெட்டர் எழுதி கொடுத்துட்டு வீட்டுக்கு போக நினைத்த பொது, துணிந்து நான் போறேன் என்று வந்தவர் யூரி காகரின் (Yuri Gagarin).

1961 ஏப்ரல் 12ஆம் தேதி, உலகமே பதபதைத்து பார்த்துக்கொண்டிருக்க , யூரி ஏதோ அந்தமான் தீவுக்கு டூர் போவது போல, 'Vostok' எனும் விண்கலத்தில் பூமியின் நீள் வட்டப்பாதையை ஒரு சுற்று சுற்றி, எந்த சேதாரமும் இல்லாமல் முழுதாய் திரும்பி வந்து நாரதரின் 'ஞானப்பழத்தை' கவ்விகொண்டார் (The first human being to visit the space).

செமட்டியால் அடி வாங்கியது போலிருந்தது அமெரிக்காவிற்கு. "ஆஹா பழம் போச்சே..! போனது போச்சு...ஆனா பழம் போனாலும் வடை போகக்கூடாது" என்று அடித்துச் சொன்னார் அதிபர் ஜான் கென்னடி (John F Kennedy). 

யூரி டூர் கிளம்புவதற்கு மூன்று மாதம் முன்னர் (20th January 1961) தான் இவர் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டிருந்தார். உடனே 240 மில்லியன் டாலர்களை (இன்றைக்கு அதன் மதிப்பு 174 பில்லியன், ருபாய் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் 174000000 X 65 = 11348097300.00) சுளையாய் கொடுத்து 'அப்போலோ' வை (Project Apollo) வேகப்படுத்தினார். 

அப்போலோ என்பது நம்மவூர் ஆஸ்பத்திரி இல்லீங்க...! அது அமெரிக்க அப்போலோ. நாசா (NASA) வின் செல்லக் குழந்தை. லட்சக்கணக்கான கோடிகளை விழுங்கும் ஒரு விண்வெளி ஆராய்ச்சி திட்டம். குறிப்பாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது.

ஒரு மாதம் கூட காத்திருக்கவில்லை அவர்கள்.  1961 மே 5ஆம் தேதி, ஆலன் ஷெப்பர்ட் (Alan Sheppard) என்பவரை விண்வெளிக்கு அனுப்பி நானும் 'ரூட்டுத்தல' தான் என்று காட்டியது அமெரிக்கா.

ஒரு மாதத்திற்குள் அமெரிக்கா சாதிக்கும் என்று ரஷ்யா எதிர் பார்க்கவே இல்லை. ரஷ்யா முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கென்னடி அமெரிக்கர்களுக்கு ஒரு சத்தியம் செய்தார்.

"இனி நாங்கள் சும்மாவெல்லாம் விண்வெளியில் சுற்றப் போவதில்லை. எங்கள் இலக்கு அந்த வடை தான். இன்னும் பத்தே ஆண்டுகளில் நிலவில் அமெரிக்க மனிதக்கால் தடம் பதிய வைப்போம்"  

"ஆயா சுட்ட வடை நமக்கே" என்ற வீர வசனத்தோடு சீறிப் பாயத் தயாரானது அமெரிக்காவின் அப்போலோ.



4. இனிமேல் தான் ஆரம்பம் 

கென்னடியின் வீர சபதத்தை எல்லாம் ரஷ்யா கண்டுக்கவே இல்லை. அடங்காமல் அடுத்த ரவுண்டுக்கு போனார்கள். 

1963 ஜூன் 16ஆம் தேதி, வேலன்டினா விளாடிமிரொவ்னா (Valentina Vladimirovna) விண்வெளிக்கு போன முதல் பெண்மணி (First woman to visit space) என்று சரித்திரத்தில் இடம் பெற்றார். அதோடு நிற்காமல் முன்பு ரஷ்யா ஏவிய, விண்வெளியில் அநாமதேயமாய் சுற்றிக் கொண்டிருந்த வின்கலத்தொடு தொடர்பையும் ஏற்படுத்தி சாதனை செய்தார். 

இங்கு முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டி உள்ளது.

இதுவரை விண்வெளியில் நடந்தவை இந்த ரெண்டு விஷயங்கள் தான்:

1. மனிதர்களை ஏற்றிக் கொண்டு போன விண்கலங்கள், திட்டமிட்டு வகுத்துக் கொடுத்த பாதையில், சமர்த்தாய் பூமியை ஒரு சுற்று சுற்றி விட்டு திரும்ப வந்தன.

2. மனிதர்கள் இல்லாமல் போன விண்கலங்கள், அங்கிங்கெனாதபடி எங்கெலாமோ சுற்றி நிறைய படங்கள் எடுத்து அனுப்பி விட்டு, கடைசீயில், எரி பொருள் தீர்ந்தவுடன் நிலவில் மோதி மாண்டு போயின.

நடக்க முடியாமல் போனவை என்பதும் இரண்டு விஷயங்கள் தான்:

1. நிலவுக்கு அருகில் போகும் விண்கலங்கள், அதன் மீது மோதி அழியாமல் தரை இறங்குவது.

2. பூமியின் நீள் வட்டப் பாதையில் இருந்து விலகி போகும் விண்கலங்கள், மீண்டும் நீள் வட்டப் பாதைக்கு வந்து பூமிக்கே திரும்ப வருவது.

இது இரண்டும் நடந்து விட்டால்...சாதித்து விட்டால்...ஆயா சுட்ட வடை நமக்கே..!

மறுபடியும் ரஷ்யாவும் அமெரிக்காவும் அடித்துக் கொள்ள ஆரம்பித்தன.

நிலவில் யார் முதலில் விண்கலத்தை தரை இறக்குவது என்பதில் இரண்டு நாடுகளுக்குமே ஆரம்பத்தில் மீசையில் மண் தான். மாறி மாறி பட்டாசு தான் வெடித்தது...!

தொடர் தோல்விகளுக்குப் பின் ரஷ்யா, 'நான் தான் பெரியண்ணன்' என்று மறுபடி உலகுக்குக் காட்டியது பிப்ரவரி 3ஆம் தேதி 1966இல். லூனா-9  என்கிற அந்த விண்கலம் ஒரு பறவையை போல் நிலவின் மீது அற்புதமாய் தரை இறங்கியது. 4 மாதத்திற்கு பின் அமெரிக்காவின் சர்வேயர்-1 நிலவில் கால் வைத்தது.

சாத்தியப்படாத இரண்டில் ஒன்று கைகூடி விட்டது, அடுத்து...? 

நிலவிற்கு பயணம் செய்யப் போகும் முதல் மனிதன் யார்...?

இதுவரை நடந்த எல்லா  போட்டியிலும் ரஷ்யா தான் First Prize. 

சூடான வடையை அப்படியே லபக்கும் ஆவலோடு முந்திப் போனது ரஷ்யா தான்.

ஆனால்....!

இதற்குப் பின் நடந்தது தான் சற்றும் எதிர்பார்க்காத, மிகவும் சுவாரஸ்யமான கதை...!

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடரலாம்.

மிக்க அன்புடன்,
ஸ்ரீராம் சம்பத்குமார் 

No comments:

Post a Comment